தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வு போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கம் இதய சுத்தியுடன் ஆதரவு – மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்

206

தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நியாயமான சம்பள உயர்வுக்கான போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கம் தனது இதய சுத்தியுடனான ஆதரவினை வழங்கி வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு மற்றும் தொழிலாளர்களின் நியாயாமான சம்பளத்துக்கான போராட்டம் தொடர்பாக தோட்டத் தலைவர் மற்றும் தோட்டத் தலைவிமார்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ப. திகாம்பரம், நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, கட்சியின் செயலாளர் பிலிப், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திர சிகாமணி, கட்சியின் அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள் உள்ளிட்ட தோட்டத் தலைவர் மற்றும் தலைவிமார் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் குறிப்பிடுகையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற குறிப்பிட்ட தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பத்தில் தொழிலாளர்களை தூண்டிவிட்டு தமது தொழிற்சங்க அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் கபடத்தன்மையை புரிந்துகொண்ட தோட்டத் தொழிலாளர்கள் அந்த சதி வளைக்குள் சிக்கிக்கொள்ளாது தாமாகவே ஒன்றிணைந்து தங்களைப் போராட்டத்துக்கு வகுத்துக்கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில் தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தினர்கள் தீவிரமாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். தமது சம்பளத்தை நிர்ணயிக்கும் தரப்புகளுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தை சிலர் தமது அரசியல் தொழிற்சங்க பலத்தினை தக்கவைத்துக்கொள்வதற்கு பயன்படுத்த முயல்வதை எக்காரணம் கொண்டும் எம்மால் அனுமதிக்க முடியாது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி விட்டு விட்டு அதில் யாரும் தலையிடக்கூடாது. நாங்கள் எப்படியும் வாங்கிக் கொடுப்போம். உங்கள் சட்டைப்பையை நிரப்புவோம் என்று கூறி மார்தட்டிக் கொண்டவர்கள் இன்று தொழிலாளர்களின் போராட்டத்தை பயன்படுத்தி குளிர்காய எத்தனிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை கம்பனிகளுடன் பேசி வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்ள முடியாதவர்கள் இன்று மக்களை திசை திருப்பி அரசியல் தொழிற்சங்க இலாபம் தேட முனைகின்றனர்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் தமது கையாலாகாத தன்மையை மறைப்பதற்காக இன்று அரசாங்கம் வழங்கிய இடைக்கால கொடுப்பனவை தமது ஆயுதமாகப் பயன்படுத்தி பேச்சுவார்த்தையின் தோல்வியை சமாளிக்க முயல்கின்றனர். தமக்கு அரசியல் பலம் இல்லை என்று நொண்டி சாட்டு கூறுகின்றனர். அரசியல் பலம் இருக்கும் போது மாத்திரம் தொழிலாளர்களுக்கு எதுவிதமான நன்மையும் பெற்றுத்தராத இவர்கள் இன்றும் எமது மக்களை ஏமாற்றியே அரசியல் செய்ய நினைக்;கின்றனர். எமது மக்கள் இந்த ஏமாற்றுத்தனத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர். எனவே, இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் தமது பொறுப்பை உணர்ந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். இல்லையெனில், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுசன போராட்டம் மேலும் தீவிரமடையும். அதேபோல இந்தப் போராட்டங்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கம் தமது பூரண ஆதரவினை வழங்கும் என்பதோடு எதிர்வரும் 6ம் திகதி மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.

தகவலும் படங்களும்:- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed

SHARE