வவுனியாவில் பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவளித்தும் அக்கோரிக்கையை பெருந்தோட்ட கம்பனிகளை ஏற்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
குறித்த போராட்டம் எதிர்வரும் 13.10.2016 அன்று இடம்பெறவுள்ளது.
போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு தனது பூரண ஆதரவினை வழங்குவதாக இதன் செயலாளர் சு.டொன்பொஸ்கோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
75 வீத வரவைக் கொண்ட தோட்டத் தொழிலாளரின் சம்பளம் தற்போது நாளொன்றுக்கு ரூபா 620 ஆக இருந்த போதிலும் அடிப்படைச் சம்பளம் வெறும் ரூபா 450 ஆக இருக்கின்றது.
ஆயிரம் ரூபாவை சம்பளமாக கோரும் தொழிலாளரின் கோரிக்கைக்கு நாட்சம்பளமாக ரூபா 730ஐ வழங்க தோட்டக்கம்பனிகள் உத்தேசித்துள்ளன.
அதுவும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியே உள்ளன. அதாவது பறிக்கப்படும் தேயிலையின் அளவு, வேலை செய்யும் நாள் முதலியவற்றைக் கொண்டே சம்பளம் வழங்கப்படும்.
மேலும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் உத்தேசித்துள்ளன.
இவ்வாறு பார்க்கும் போது நாளாந்த வருமானம் சுமார் முந்நூறு ரூபாவாகவே இருக்கும் இது ஒரு குடும்பத்திற்கு போதுமானதா? என சிந்திக்க வேண்டும்.
ஆகவே தான் தொழிலாளரின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை நியாயமானது என்பதை வலியுறுத்துகின்றோம்.
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதால் சம்பளம் உயர்த்தி வழங்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தோட்டங்கள் நட்டமடைவதற்கு காரணம் தவறான நிர்வாகச் செயற்பாடுகளே.
தோட்டங்கள் இலாபகரமாக இயங்கியபோது தொழிலாளருக்கு இலாபத்தில் பங்கு கொடுத்தார்களா? இல்லை நிர்வாகிகளுக்கு இலட்சக் கணக்கில் சம்பளம் வழங்கும் கம்பனிகள் தொழிலாளரின் சம்பள உயர்வை மறுப்பது அநீதியாகும்.
ஆகவே தோட்டத் தொழிலாளரின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.