மானிடம் அறக்கட்டளையும், தெல்லிப்பழை தாய்மார் கழக இணையமும் இணைந்து யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை முன்பாக மானிடம் இயற்கை சுவையகத்தை ஆரம்பித்து வைத்துள்ளன.
“இயற்கையோடு வாழ்வோம் புற்றுநோயை வெற்றி கொள்வோம்” எனும் மகுடவாசகத்துடன் இந்தச் சுவையகம் இயங்க ஆரம்பித்துள்ளது.
நவராத்திரியின் விஜயதசமி தின நன்னாளான நேற்றுச் செவ்வாய்க்கிழமை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். நந்தகுமாரன் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
முற்றிலும் தாய்மார்களை மாத்திரம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவகம் இயற்கையான பழப்பானம், மோர், இலைக்கஞ்சி, கூழ் குரக்கன் ரொட்டி, சத்து மா உருண்டை, எள்ளுப் பாகு, மோதகம் என எமது பாரம்பரிய இயற்கை உணவு வகைகளை சுவைக்க சந்தர்ப்பம் வழங்குகின்றது
இதேவேளை, மேற்படி சுவையகம் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகிலுள்ள இயற்கை வேளாண் பண்ணையில் உற்பத்தியாகும் மரக்கறிகளைக் கொண்டு இரசாயனத் தாக்கமற்ற உணவு வகைகளைப் பொது மக்கள் பெற வழிவகை செய்யவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.