விச ஊசி விவகாரம் தொடர்பில் எட்டாவது வாரமாகவும் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இதுவரை 185 முன்னாள் போராளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில் முன்னாள் போராளிகள் ஆர்வம் காட்டாத தன்மையே காணப்படுகின்றது என வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடமாகாண வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகின்றது.
அதன்படி எட்டாவது வாரமாக மருத்துவ பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதுவரை மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில்
யாழ் மாவட்டத்தில் 29 பேரும்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 27 பேரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும்,
வவுனியா மாவட்டத்தில் 07 பேரும்,
மன்னார் மாவட்டத்தில் 05 பேருமாக 185 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் செப்ரெம்பர் 2ம் திகதி 26 பேரும், செப்ரெம்பர் 9ம் திகதி 47 பேரும், செப்ரெம்பர் 15ம் 16ம் திகதிகளில் 22 பேரும், செப்ரெம்பர் 23ம் திகதி 30 பேரும், செப்ரெம்பர் 30ம் திகதி 21 பேரும், இம்மாதம் 7ம் திகதி 15 பேரும், இம் மாதம் 14ம் திகதி 10 பேரும், கடந்த வெள்ளிக்கிழமை 14 பேரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, மருத்துவ பரிசோதனையில் பங்கேற்பதில் முன்னாள் போராளிகள் பலரும் ஆர்வம் காட்டவில்லை.
மன்னார், வவுனியா மாவட்டங்களில் முன்னாள் போராளிகள் பெரியளவில் சமூகமளிக்கவில்லை எனவும் வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது