அமெரிக்க தேர்தல் கணிப்புகளை தவிடுபொடியாக்கினார் : புதிய அதிபராக டிரம்ப் தேர்வு

272

 

வாஷிங்டன்: கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி அமெரிக்காவின் 45வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். விறுவிறுப்பான ஓட்டு எண்ணிக்கையில்  ஆளும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 45வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. குடியரசுக்கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டார்கள். மொத்தம் 50 மாகாணத்தில் உள்ள 538 பிரதிநிதிகள் ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறும் நபர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

ஆரம்பத்தில் இழுபறி:  தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஹிலாரியே வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாகாணமாக நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆரம்பத்தில் இருவருக்கும் இழுபறி ஏற்பட்டது.  ஆனால் முக்கிய மாகாணங்களில் டிரம்ப் ஒட்டுமொத்த வெற்றியை பெற்றார். இதனால் ஹிலாரிக்கு பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து டிரம்ப் முன்னிலை பெற்று 289 தேர்தல் ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்தார். ஹிலாரிக்கு 218 தேர்தல் ஓட்டுகள் கிடைத்தன.

பதிவான ஓட்டுகளில் டிரம்ப்பிற்கு 47.52 சதவீதம் கிடைத்தன. ஹிலாரிக்கு 47.65 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. 5.91 கோடி பேர் டிரம்பிற்கும், 5.93 கோடி பேர் ஹிலாரிக்கும் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அதிபராக வெற்றி பெற்றது வரை டிரம்ப் பயணம் அபாரமானது. டிரம்ப் வந்த பாதை: 162 வருட பாரம்பரியமான குடியரசுக்கட்சி சார்பில் மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர். அவர்களில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மகன் ஜெப் புஷ் முக்கியமானவர். அவர்களை எல்லாம் வீழ்த்தி கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து பெண்கள், சிறுபான்மையினர், அகதிகள் பற்றிய அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. 12 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். அமெரிக்க அதிபராக, அதுவும் தலைமை தளபதி பதவி வகிக்க டிரம்ப் தகுதியற்றவர் என அவரது கட்சியிலும் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.  இதையெல்லாம் மீறி எந்த ஒரு அரசியல் பதவியும் வகிக்காத டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிரம்ப் வயது 70. இதன் மூலம் அதிக வயதில் அதிபராகும் நபர் என்ற சாதனையையும் டிரம்ப் படைத்துள்ளார்.

தோல்விக்கு காரணம்: உலகம் முழுவதிலும் ஏன் அமெரிக்காவிலும் ஹிலாரியே அதிபராவார் என்ற கணிப்பு நிலவியது. ஆனால் அதையெல்லாம் மீறி டிரம்ப் சாதனை படைத்துள்ளார். கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் இருந்த ஹிலாரியை வீழ்த்தியது அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அரசு விவகாரங்களை தனிப்பட்ட இமெயிலில் பகிர்ந்து கொண்டது தொடர்பாக எப்பிஐ அறிவித்த மறுவிசாரணைதான் என்று அமெரிக்க தேர்தல் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். குடியரசுக்கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் அந்த கட்சிசார்பில் பதவி ஏற்கப்போகும் 19வது அதிபராவார்.

டிசம்பர் 19ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செனட்டர்கள் கூடி முறைப்படி டிரம்ப்பை அதிபராக தேர்வு செய்ய உள்ளனர். அவர் 2017 ஜனவரி 20ல் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்பார். வெற்றி பெற்ற டிரம்ப்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரியும் அவரை வாழ்த்தினார். தொடர்ந்து நியுயார்க்கில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாக உரையாற்றினார். அப்போது ஒன்றுபட்டு இணைந்து செயல்பட்டு அமெரிக்காவை உயர்த்த பாடுபடுவோம் என்றார்.

ஹிலாரி வாழ்த்து

வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் முன் டிரம்ப்பை தொடர்பு கொண்ட ஹிலாரி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்தினார்

SHARE