இந்திய – வேலூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அதனை புதைத்த இடத்தில் விலங்கின ஆர்வலர் தோண்டி எடுத்தபோது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றும் ஃபேஸ்புக் உட்பட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் கடந்த 19ம் திகதி நண்பகலில் பெண் குரங்கு ஒன்று அங்கு தங்கியிருக்கும் மருத்துவ மாணவர்களின் அறைக்குள் நுழைந்துள்ளது.
அதனை பிடித்து கால்களை கட்டி, குச்சியாலும், பெல்ட்டாலும் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த வாயில்லா உயிரினமான குரங்கின் கால்களும், எலும்புகளும் உடைந்துள்ளன.
ஆனாலும் திருப்தியடையாத அந்த மருத்துவ மாணவர்கள் ஒரு இரும்பு கம்பியை அதன் ஆசனவாய் வழியாக செலுத்தி அதனை கொடூரமாக கொலைசெய்ததாக கூறப்படுகிறது.
பரிதாபமாக உயிரிழந்த அந்த குரங்கை, அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் சிலர் சமயலறைக்கு பின்னால் குழி தோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வேறு சில மாணவர்கள், விலங்கின ஆர்வலர்களிடம் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டை அடுத்து மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்து பின்னர், குரங்கு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து அதனை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் விலங்கின ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.