யாழ்.பல்கலைக்கான நிதியை குறைத்துவிட்டு நல்லிணக்கம் குறித்து பேசுவது வெட்கக்கேடு-பிமல் ரத்நாயக்க

259

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான நிதியொதுக்கீட்டை 500 மில்லியன் ரூபாவால் குறைத்துவிட்டு, நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக்கேடான விடயமென, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கான நிதியொதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

”போரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விடுதி பிரச்சினை உள்ளது. தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சாப்பாடும் 60 ரூபாவிற்கே விற்கப்படுகிறது. இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ள நிலையில், ஏனைய பல்கலைக்கழகங்களை விட யாழ்.பல்கலைக்கழத்திற்கே அதிக நிதியை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் குறைக்கப்பட்டுள்ளது.

இப்படி குறைப்பு செய்துள்ள அரசு, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் நல்லிணக்கம் தொடர்பாக பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

அத்தோடு, ராஜபக்ஷாக்களின் அரசியல் பலத்தாலேயே மாலபே தனியார் மருத்துவ வைத்தியசாலை அமைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களுடன் அதனை ஒப்பிடவேண்டாம். சட்டவிரோதமான குறித்த நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும்” என்றார்.

SHARE