
பல்வேறு துறைகளில் தடம்பதித்து வரும் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பான 2.0 திரைப்படத்தின் First Look Poster வெளியீடு மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கொலிவூட் மற்றும் பொலிவூட்டின் பிரபல நட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்தனர்.
உலகளாவிய ரீதியில் பல்வேறு துறைகளில் காலடி பதித்துவரும் லைக்கா நிறுவனம் தென்னிந்தியாவில் ஏற்கனவே பல வெற்றிப்படங்களை குவித்துள்ள நிலையில், தற்போது சுமார் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் தயாரித்துவரும் திரைப்படமே 2.0.
வெற்றிப்பட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஓஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சுப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், நாயகி எமி ஜாக்சன், பொலிவூட் நடிகர் அக்ஷய் குமார், , இயக்குநர் ஷங்கர், லைக்கா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, பிரதி தலைவர் பிறேம் சிவசாமி, நடிகர் சல்மான் கான், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், லைக்காவின் தயாரிப்பு நிர்வாகி ராஜு மகாலிங்கம் என பலர் கலந்து சிறப்பித்த திரைப்படத்தின் முதற்பார்வையே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஈழத் தமிழரான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை மற்றும் பிரித்தானியாவில் மட்டுமன்றி இந்தியாவிலும் பல துறைகளில் காலடி பதித்துள்ளதோடு, உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட ஒருவராவார்.
அதுமட்டுமன்றி இலங்கையில் அமைந்துள்ள ஞானம் அறக்கட்டளையின் ஊடாக வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஞானம் அறக்கட்டளையின் மனிதாபிமான சேவையை பாராட்டி, அதன் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கர் மற்றும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா ஆகியோருக்கு மாண்புமிகு உலக அதிகாரிகள் அமைப்பானது கடந்த ஓகஸ்ட் மாதம் அதியுயர் விருது வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.