ஐக்கிய தேசியக் கட்சியுடன் பஷில் ராஜபக்ச இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு என்னிடம் அதிகமான ஆதாரங்கள் உள்ளன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
பஷில் ராஜபக்ச எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாகக் கூட ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்றும் டிலான் பெரெரா குறிப்பிட்டார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா மேலும் குறிப்பிடுகையில்:-
பஷில் ராஜபக்ச ஐக்கிய தேசியக்கட்சியுடன் இரகசியப் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக நான் குறிப்பிட்டிருந்தேன். அது தொடர்பில் என்னிடம் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பாகக் கூட பஷில் ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கட்சியில் இருக்கின்ற அனைவரையும் பயன்படுத்தி மேலே வருவது பஷில் ராஜபக்சவின் கொள்கையாகும்.
அவர் அக்காலத்தில் சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தி மேலே வந்தார். தற்போதும் சுதந்திரக் கட்சியை பயன்படுத்தியே மேலே வருவதற்கு முயற்சித்திக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் அவர்கள் என்ன கூறினாலும் பஷில் ராஜபக்சவும் ஐ.தே. க. வினரும் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பதே உண்மையாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பல வழிகளில் பஷில் ராஜபக்சவுக்கு உதவி வருகிறார். இதனை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டோம்.
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இரகசிய டீல் இருப்பதன் காரணமாகவே பஷில் ராஜபக்சவுக்கு பிரதமர் பல வழிகளில் உதவி வருகின்றார்.